இலங்கை

உரமானியம் கோரி கொழும்பில் சிவில் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக முறையான தீர்வுகளை வழங்காவிடின், கொழும்பை முற்றுகையிட்டுப் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகக் கலன்பிந்துணுவெவ, துடுவல பரணகம கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

 

தற்போது சந்தையில் உர விநியோகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

அத்துடன், சந்தையில் ஒரு மூடை உரத்தின் விலை 9,000 ரூபா முதல் 18,500 ரூபா வரை அதீதமாக உயர்ந்துள்ளதால், இப்போகத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தடையின்றித் தொடர்வதில் பெரும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் நெல்லின் விலை 100 முதல் 105 ரூபா வரையான குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

 

தற்போதைய இந்த விலை வீழ்ச்சி காரணமாக, பயிர்ச்செய்கைக்காகத் தாங்கள் செலவிட்ட ஆரம்ப மூலதனத்தைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு விபரித்துள்ளது.

 

இந்த இலாபமற்ற நிலை நீடித்தால் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களும் கடுமையான வாழ்வாதாரப் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள கெமுனு ஐக்கிய விவசாயிகள் அமைப்பு, அரசாங்கம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

குறிப்பாக, விவசாயிகளுக்குப் போதிய உர மானியங்களை வழங்க வேண்டும் என்றும், உர விலையைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், நாடு முழுவதிலுமுள்ள விவசாய சமூகங்களை ஒன்றிணைத்துக் கொழும்பில் சிவில் போராட்டங்களை நடத்தத் தயங்கப்போவதில்லை என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button