
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களில் வென்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 எனும் அறுதி பெரும்பான்மை தேவை. இந்த எண்ணிக்கை தவெகவுக்கு இல்லாததால், கூட்டணியை நோக்கி நகர்ந்தது தவெக.
அறுதி பெரும்பான்மைக்காக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இரண்டு இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு கோரிக்கை விடுத்தது தவெக. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அமைச்சரவையில் இடம் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் தவெக கூட்டணியில் இணைந்தது.
இதனைத் தொடர்ந்து இரு இடதுசாரி கட்சிகளும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்றும், மாநில நலன் உள்ளிட்ட விவரங்களுக்கு பிரச்சினை வந்தால் திமுகவுடன் பயணிப்பதும் என தீர்மானித்து அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு சட்டமன்றத்தில் 116 எம்.எல்.ஏ ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகைச் சென்றார்.
இதற்கிடையில், ஐ.யூ.எம்.எல். தனது ஆதரவை தருவதாக அறிவித்ததாக தகவல் வெளியானது. இதேபோல், விசிகவும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு தனது ஆதரவையும் தருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஐ.யூ.எம்.எல். தவெகவுக்கு ஆதரவு தரவில்லை என பிறகு அறிக்கையை வெளியிட்டது. அதேசமயம், விசிக ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர், அமைச்சரவையில் இடம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. விசிகவும் இன்னும் அதிகாரபூர்வமாக தனது ஆதரவை தவெகவுக்கு அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தாலும், அவர் ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு உத்தரவிட கோரி அக்கட்சியின் சார்பில் எழிலரி எனும் சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





