இலங்கை

45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது

ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

 

மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்குள், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள்

மூலம் பொதுமக்களுக்கு 57,000 மெட்ரிக் டொன் டீசல் வழங்கப்பட்டதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

அதே காலகட்டத்தில், 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்திற்கொண்டு, அரசாங்கம் அனைத்து வாகனங்களுக்கும் QR எரிபொருள் விநியோக முறையை கட்டாயமாக்கியுள்ளது.

 

QR முறையின் கீழ், ஒவ்வொரு நபரும் வாரத்திற்கு பெறக்கூடிய எரிபொருளின் அளவு ஒரு நிலையான ஒதுக்கீட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

திருத்தப்பட்ட QR எரிபொருள் ஒதுக்கீட்டின் கீழ், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர்களுக்கு உரிமை உண்டு. முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் 15 லீற்றர்களைப் பெறலாம், வேன்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்கள் 40 லீற்றர்களைப் பெறலாம்.

 

லொறிகளுக்கு 200 லீற்றர்களுக்கும், பேருந்துகள் 60 லீற்றர்களுக்கும் உரிமை உண்டு.

 

இதனிடையே, பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை திருத்தியமைக்கவும், நிலையான ஒதுக்கீட்டிலிருந்து விலகி, பயணித்த தூரத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த திருத்தப்பட்ட முறை முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபை மூலம் வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

 

முன்னர் QR எரிபொருள் அமைப்பின் கீழ் பதிவு செய்த நபர்களுக்கு, வாகன உரிமையில் அல்லது பதிவுசெய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசி எண்களில் எந்த மாற்றங்களும் இல்லாத பட்சத்தில், fuelpass.gov.lk வலைத்தளம் மூலம் QR ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

 

முன்னர் பதிவு செய்யாதவர்களுக்கும், உரிமையாளர் விபரங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களை மாற்றிய வாகன உரிமையாளர்களுக்கும், fuelpass.gov.lk வலைத்தளம் புதிதாக பதிவு செய்ய அல்லது மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

வாகனங்கள் அல்லது தொலைபேசி எண்களை மாற்றிய நபர்களையும், புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்தவர்களையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு வருவதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாகக் கண்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button