
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சாட்சியங்களை அச்சுறுத்தி உள்ளக விசாரணையில் நீதி வழங்குவோம் என அநுர அரசு பொய்யுரைப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சாட்சியங்களை குற்றப் புலனாய்வாளர்களை கொண்டு அச்சுறுத்தி, உள்ளக நீதி விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜபாலதெரிவித்துள்ளார்.
கடந்தகால அரசுகளைப் போல அரச இயந்திரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு அநுர அரசும் செயற்பட தயாராகியுள்ளது. இதற்கான ஆதாரம் சாட்சியங்களை அச்சுறுத்துவதன் மூலம் நிரூபனமாகியுள்ளது.
சர்வதேச விசாரணை
கடந்த கால அரசுகளை விட மாறுபட்ட இனவாதம் அற்ற, குற்றமற்றவர்களாக அநுர அரசு இருந்தால் ஏன் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்.
நாட்டை நிரந்தர சமாதன நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக் கூறலை பெற்றுக் கொடுக்க வேண்டும் அதன் மூலமே மீள் நிகழாமையையும் நிலைமாறு கால நீதியையும் உருவாக்கலாம்.
உள்ளக விசாரணை என்பது தோல்வியடைந்த பொறிமுறை மாத்திரமல்ல பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்த பொறிமுறை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரி வரும் வெளியக பொறிமுறை மூலம் நீதியை பெற்றுக் கொடுப்பதே நாட்டின் நிரந்தர அமைதிக்கான வழி.
இதனை அநுர அரசும் செய்ய தவறினால் கடந்தகால அரசுகளைப் போல ஒரு இனவாதம் மேலோங்கிய மற்றும் சுத்துமாத்து அரசாகவே பார்க்க முடியும்“ என குறிப்பிட்டுள்ளார்.





