இலங்கை

முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம் பேசும் காத்தான்குடி படுகொலை உண்மைகள்!

மட்டக்களப்பு- காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலைசெய்யப்பட்ட அவலம் இனவாத சிறிலங்கா அரசியல் போக்கின் ஒரு அங்கமா என்ற சந்தேகம் இன்றளவும் வலுத்து வருகிறது.

தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வலியை தந்த இந்த தாக்குதல், 1990 ஓகஸ்ட் 3 அன்று நடைபெற்றது.

இதைச் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் எனவும் இன்றைய அரசியல்வாதிகள் நீதிக்காக போராடுகின்றோம் என்றும் மார்தட்டி குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆனால், ஆகஸ்ட் 5 அன்று அப்போதைய இலங்கை அரசியல் கட்சிகளின் கூட்டறிக்கையில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட யாரும் புலிகளைக் குற்றம்சாட்டவில்லை என கடந்த கால பத்திரிக்கை ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முஸ்லிம் ஊர்காவல் படையினர்

இதன் பின்னர், முஸ்லிம் ஊர்காவல் படையினர், புலிகள் இதைச் செய்ததாகப் பரப்புரை செய்து, பாதிக்கப்பட்டவர்களாக சாட்சிகளை உருவாக்கி ஊடகங்களில் பரவலாக்கியதாகவும் கூறப்படுகிறது

அப்போது கிழக்கு மாகாண புலிகளின் தளபதியாக இருந்தவர் கருணா.

2006–2009 இல் நடந்த தமிழர் இன அழிப்புப் போரில், அவர் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் துரோகம் செய்த அவரது வரலாறு இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது.

மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழீழப் போராட்டத்தை பலவீனப்படுத்தியவர் கருணாவே என்ற துரோக வரலாற்றையும் கருணா சம்பாதித்து வைத்துள்ளார்.

இதை சிங்கள அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை

1980களில் தமிழீழ விடுதலைப் போரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று, மாவீரர்களாக உயிர்நீத்தனர். அவர்களுக்கு “மாவீரர்” கௌரவம் வழங்கப்பட்டு, இன்றுவரை நினைவுகூரப்படுகின்றனர்.

 

ஆனால், இலங்கை அரசு, புலிகளை நேரடியாக எதிர்க்க முடியாததால், மத அடிப்படையில் தமிழர் – முஸ்லிம் பிரிவினையை உருவாக்க முயன்ற பின்னணியே காத்தான்குடி அவலம் என முன்னாள் போராளிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

இதற்காக, சில சர்வதேச சக்தியின் ஆலோசனையுடன் முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கி, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு தனி தேசம் எனற ஆசையைக் காட்டி, புலிகளுக்கு எதிராக ‘ஜிகாத்’ அறிவிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள்

இதன் விளைவாக, முஸ்லிம் ஊர்காவல் படைகள், சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களை படுகொலை செய்தன.

1990 ஆகஸ்ட் 6 அன்று, அம்பாறையில் திராய்க்கேணியில், விசேட அதிரடிப் படை (STF) உதவியுடன், கோயிலில் தஞ்சமடைந்த 47 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 350 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 13 வயது சிறுமி சரோஜா உடல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1997 இல், இதற்கு விசாரணை கோரிய திராய்க்கேணி அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி படுகொலை செய்யப்பட்டார். 2003 இல், அங்கு மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன, ஆனால் விசாரணை நடக்கவில்லை.

1990 செப்டம்பர் 9 அன்று, மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில், 198 பொதுமக்கள், உட்பட 68 சிறுவர்கள், இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

80க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் இருந்து தப்பிய சிவகுமார் என்பவர் இதை ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். மேலும் வீரமுனையில், 1990 ஜூன்-ஓகஸ்ட் இடையே, 232 பேர் கொல்லப்பட்டனர்.

1600 வீடுகள் அழிக்கப்பட்டன. ஜூன் 20 அன்று, பிள்ளையார் கோயிலில் 69 பேர், ஜூலை 5 இல் 13 பேர், ஜூலை 10 இல் 15 பேர், ஜூலை 16 இல் மல்வத்தையில் 30 பேர், உட்பட 8 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

ஓகஸ்ட் 12 இல், அகதி முகாமில் 14 பேர், உட்பட கோயில் தர்மகர்த்தா, கொல்லப்பட்டனர். சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1352 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்

பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, நிந்தவூர், சம்மாந்துறை உள்ளிட்ட தமிழ்க் கிராமங்கள் சூறையாடப்பட்டு முஸ்லிம் கிராமங்களாக மாறின. அட்டைப்பள்ளம், திராய்க்கேணி, சொறிக்கல்முனை போன்றவை முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின.

பரம்பரை தமிழர்கள் அகதிகளாக, அங்கீகாரமற்றவர்களாக மாறினர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

சம்மாந்துறை காளி கோயில், அட்டப்பள்ளம் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. 35 ஆண்டுகளாக விசாரணையோ, நீதியோ இவற்றுக்கு கிடைக்கவில்லை.

புலிகளின் நிலைப்பாடு

முஸ்லிம் ஊர்காவல் படைகளின் இப்படுகொலைகள் இருந்தபோதிலும், புலிகள் அப்பாவி முஸ்லிம்களைத் தாக்கவில்லை என்பது இன்று இலங்கையில் வாழும் முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு.

இந்த வன்முறைகள், சிங்கள அரசின் திட்டத்தின் கீழ், தமிழர்களை எல்லைக் கிராமங்களில் இருந்து வெளியேற்றி, முஸ்லிம் ஆதிக்கத்தை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டவை என கூறப்படுகிறது.

முஸ்லிம் தலைமைகள் இவற்றைக் கண்டிக்கவில்லை. தற்கால ஊடகப் பரப்புரைதற்போது, தமிழக முஸ்லிம்கள் முகநூலில், புலிகள் மீது மட்டும் பழி சுமத்தி, இச்சம்பவங்களை மத அடிப்படையில் சித்தரிக்கின்றனர்.

இது வரலாற்றை மறந்து, பிரிவினையைத் தூண்டும் முயற்சியாகும். வெளிநாடுகளின் ஆதரவுடன் இலங்கை அரசு தமிழீழப் போராட்டத்தை மத அடிப்படையில் பிரித்து பலவீனப்படுத்தியது.

அதன் விளைவாக இன்று சில வெளிநாட்டவர்களின் ஆதிக்கம், கிழக்கிலும், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் மேலோங்கியுள்ளதா என்ற சந்தேகமும் வலுப்பெற்று வருகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button