
யாழ்ப்பாணம் – ஏ 9 வீதிக்கு அருகிலுள்ள செம்மணி, ஆரியாலை சிந்துபாத்தி இந்துமயானத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மனித எலும்புக்கூடுகள், உடைகள் மற்றும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குற்றப் புலனாய்வு துறையின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் விண்ணப்பத்தின் அடிப்படையில், இப்பொருட்களை பொதுமக்களுக்கு காண்பிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2025 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மதியம் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சிந்துபாத்தி இந்துமயானத்தில், இந்த உடைகள் மற்றும் பிற பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து, பொருட்களைப் பார்வையிட்டு, அவற்றை அடையாளம் காணும் பட்சத்தில் நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு பிரிவிற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






