இலங்கைதமிழீழம்தமிழ்

செம்மணியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் அடையாளம்; நாளை மன்றில் நடக்கவுள்ள முக்கிய சம்பவம்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி சிந்துபாத்தி செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஒரு வார இடைவேளைக்குப் பிறகு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய அகழாய்வில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. அதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதியும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மழை அங்கியும், அதனுடன் மீட்கப்பட்ட பொத்தான்களும், காலுறையும் சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை செம்மணி புதைகுழி வழக்கு நாளைய தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதியில் திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் அறிக்கைகள் பல சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்மணி புதைகுழி வழக்கு கடந்த 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த பகுதியில் குற்றமொன்று நடந்தது என்பது தெளிவாகவில்லை. எனவே மீட்கப்பட்ட என்புக்கூடுகள் தொடர்பில் காலத்தை அறிவதற்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

அதேவேளை இதுவரை எடுத்த பிற பொருட்களுக்கான அறிக்கையை ராஜ் சோமதேவாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதென்றும், தொடர்ந்து இது சம்பந்தமாக ஒரு குழு ஒன்று அமைத்து, எதிர்காலத்தில் எவ்வாறான பரிசோதனை செய்வது தொடர்பாக நிபுணர் குழுவும் சட்டத்தரணிகளும் இணைந்து 5ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் போது தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, இன்னும் கிடைக்கப்பெறாமல் இருக்கும் மண் மாதிரிக்கான அறிக்கையைப் பெற்றுக்கொள்வதும், பல்கலைக்கழகத்திடமிருந்தும் ஒருசில அறிக்கைகள் கோரப்பட்டிருந்தது, அது சம்பந்தமான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மன்று கட்டளை இட்டுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button