
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள், கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான மாற்றங்கள் நிறைவடைந்தவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேதெரிவித்துள்ளார்.
“யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்குக் காரணம். எனவே, மைதானம் தொடர்பான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டதுடன், உள்ளக விளையாட்டு அரங்கத்தையும் உள்ளடக்கிய திட்டத்திற்கான அடிக்கல் கடந்த ஜனவரி மாதம் நாட்டப்பட்டது என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அரசியல் நோக்கத்துடன் செயல்படும் சில குழுக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததால், திட்டப் பணிகள் தடைப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவது யாழ்ப்பாண மக்களே. குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் இளம் விளையாட்டு வீரர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் சீரழிக்க வேண்டாம்,” என அமைச்சர் சுனில் குமார கமகே பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது தெரிவித்தார்.






