
வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான விசா விதிகளில் அமெரிக்கா மாற்றம்
வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான விசா நடைமுறைகளில் புதிய மாற்றங்களை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் (DHS) வெளியிட்டுள்ள புதிய இறுதி விதிமுறையின்படி, F (மாணவர்), J (பரிமாற்றத் திட்டம்) மற்றும் I (வெளிநாட்டு ஊடகம்) விசாக்கள், தற்போதுள்ள “Duration of Status”(படிப்பு அல்லது பணிக்காலம் முழுவதும் செல்லுபடியாகும்) முறையில் இனி வழங்கப்படாது.
இதற்குப் பதிலாக,
- F மற்றும் J விசா பெற்றவர்களுக்கு பொதுவாக அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை தங்க அனுமதி வழங்கப்படும்.
- I விசா பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பொதுவாக 240 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும்.
- சீனாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு, இந்தக் காலம் 90 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் தங்க விரும்புவோர், DHS-யிடம் தங்கும் காலத்தை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் அனுமதி பெற வேண்டும்.
இந்த புதிய விதிமுறை, Federal Register-ல் வெளியிடப்பட்டு 60 நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்பட்டு அமலுக்கு வரும்.
சமீப ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களைச் சிறப்பாக கண்காணிக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக DHS தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, 2025 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் அவரது விரிவான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.






