இலங்கை

எரிபொருள் விலை உயர்வு : இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, இலங்கையின் பணவீக்கம் 7 வீதம் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு யுத்தம் குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீண்டகாலமாக நீடித்துக் கொண்டிருப்பதனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் கடுமையான சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிலேயே மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்

இந்த வாரத்தில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் 5.4 – 5.5 வீதம் என்ற மட்டத்திலிருந்து பணவீக்கம் வரும் காலத்தில் மேலும் உயர்வது என்பது முற்றிலும் தவிர்க்க முடியாதது. அது இப்போது தெளிவாகத் தெரிகிறது. தரவுகளை ஆராயும் போது எரிபொருள் விலை அதிகரிப்பானது ஒருபுறமிருக்க, மறுபுறம் நுகர்வோரின் தேவைகளில் எந்தவொரு வீழ்ச்சியையும் நாங்கள் இன்னும் காணவில்லை. இதன் காரணமாகவே பணவீக்கம் 5 வீதத்திலிருந்து, இந்த நிலைமை தொடருமானால் 7 வீதம் வரை உயர்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்

இதற்கான முற்கூட்டிய தயாரிப்பு நடவடிக்கையாகவே, கடந்த வாரத்தில் எங்களது நிதிப் பணவழங்கல் கொள்கையை சற்றுக் கடினமாக்கினோம் என அவர் குறிப்பிட்டார்.

 

இதன் மூலம் அடுத்த மூன்று மாதங்களில் சந்தையிலுள்ள கேள்வியைக் கட்டுப்படுத்தி, தேவைக் குறைப்பின் ஊடாகப் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பது நாட்டிற்கு மிக முக்கியமானது என்றும், தேவையை முகாமைத்துவம் செய்வதன் மூலமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் விளக்கினார்.

இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவது தொடர்பாக நிலவும் சந்தேகங்களுக்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர், சட்டபூர்வமாக ஈட்டப்பட்ட எந்தவொரு பணத்தையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு எந்தவொரு நபருக்கும் எவ்விதத் தடையும் இல்லையெனத் தெளிவுபடுத்தினார்.

அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் பணச் சுத்திகரிப்பு தொடர்பான சட்டக் கட்டமைப்பு ஒன்று காணப்படுகிறது. அதற்கமைய, சட்டபூர்வமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தை வங்கி ஒன்றின் ஊடாக மீண்டும் இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு அனுப்புவதற்கு எந்தவொரு தடங்கலும் இல்லை. ஆனால், அது சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணமாக இருந்தால் மட்டுமே அவ்வாறு அனுப்புவது கடினமாக இருக்கும்” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் வலியுறுத்தினார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button