
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது மருத்துவமனையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக, அந்த அறைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை வேறு அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்தார்.
அத்துடன், நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் பிராந்தியத்தின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதன் காரணமாக, அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாதம்பை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.





