
டிட்வா சூறாவளி தாக்கத்தினால் கொத்மலை – றம்பொடை, வெவண்டன் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 25 குடும்பங்கள், கடந்த 6 மாதங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) குறித்த பகுதியை பரிசோதனை செய்த போதிலும், அந்த இடம் தொடர்ந்தும் அபாயகரமான வலயமாகவே காணப்படுவதால் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆறு மாதங்களாக முறையான தங்குமிட வசதிகளின்றி தற்காலிக கூடாரங்களிலேயே காலத்தைக் கழிப்பதாகக் கூறுகின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவும் போது இந்தக் கூடாரங்களில் தங்கியிருப்பது பெரும் ஆபத்தானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கூடாரங்களில் தங்கியுள்ள குடும்பங்களில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் பொதுப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர்.
மின்சாரம் மற்றும் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகள் தமக்குச் சாதகமாக அமையவில்லை எனவும், காணி மீள்குடியேற்றம் அல்லது நிரந்தர வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





