
கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலை ஒன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முத்திரையிட்டு (சீல்) மூடியுள்ளது.
ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில், நேற்று (09) அதிகாரிகளால் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதன்போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையானது சுமார் மூன்று வருடங்களாக இந்த இடத்தில் இயங்கி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் ஏனைய உற்பத்திகளுடன் சேர்த்து, 6 மில்லிமீற்றர் (6mm) அளவிலான தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழ் இன்றி, தரமற்ற முறையில் இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நுகர்வோர் விவகார அதிகாரசபை, தரமற்ற உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்தமைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.





