
வெசாக் வாரம் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டும் ஒரே காலகட்டத்தில் வருவதால், இலங்கையில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், மே மாதம் 28 அல்லது 29 ஆம் திகதியில் இஸ்லாமியர்களின்; புனிதமான ஹஜ் பெருநாள் அதனைத் தொடர்ந்த ‘அய்யாமுத் தஷ்ரீக்’ நாட்கள் வருகின்றன.
இந்த நாட்களில் இஸ்லாமியர்கள் குர்பான் கொடுக்கும் மத வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
குறிப்பாக, மே 30 ஆம் திகதி பௌத்த மதத்தினரின் புனிதமான பூரணைத் தினமாகும்.
இந்த நிலையில், வெசாக் வாரத்தில் குர்பான் கடமைகள் தொடர்பில் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இலங்கையில் வாழும் இரு வேறு சமூகங்களின் கலாசார மற்றும் மத விழாக்கள் ஒரே நேரத்தில் வருவது இது முதன்முறையல்ல என தெரிவித்த அவர், பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் மஹா நாயக்க தேரர்களுடன் ஆலோசனைகளை நடத்தி, இரு சமூகங்களின் மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இதற்கான தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்
அத்துடன் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மத நல்லிணக்கத்தைப் பேணுவதே அரசின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ வழிகாட்டல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்





