இலங்கை

இலங்கையில் போக்குவரத்துத் துறை முடங்கும் அபாயம்?

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொதுப் போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறைகள் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

 

இதன் விளைவாக இன்று (23) முதல் நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வை கருத்திற் கொண்டு, பேருந்து கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிப்பது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த விலை உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று முதல் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாகக் கூறினாலும், நடைமுறையில் எமக்கு 10 முதல் 20 லீற்றர் எரிபொருளே கிடைக்கிறது. இந்த மிகச்சிறிய அளவைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது சாத்தியமற்றது.” என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய இணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம், முதல் கிலோமீற்றருக்கான பயணக் கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளது.

 

தொடர்ச்சியான எரிபொருள் விலை மாற்றங்கள் ஓட்டுநர்களுக்கு தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இக்கட்டண உயர்வு முறைப்படி மீற்றர் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

Uber மற்றும் PickMe ஆகிய செயலி வழி போக்குவரத்து நிறுவனங்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், அத்தியாவசிய விநியோக மற்றும் போக்குவரத்துச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்க மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளன.

மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வந்த ஒதுக்கீடு அதிகரிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனங்கள், எனினும் தமது சேவையின் அளவோடு ஒப்பிடுகையில் இது போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளன.

 

சுற்றுலாத் துறை மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க விசேட ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

 

இந்நிலையில் அமைச்சரவையின் இன்றைய தீர்மானத்தைத் தொடர்ந்தே போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button