
மலையக தொடருந்து பாதையில் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக, தொடருந்து போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அம்பேவல மற்றும் நானுஓயா இடையேயான தொடருந்து பாதையைச் சீரமைக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட ‘பேலஸ்ட்’ (Ballast) புகையிரதம், இன்று அதிகாலை 1 மணியளவில் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்க்கு அருகே தடம் புரண்டது.
குறித்த தொடருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக மலையக தொடருந்து பாதையை தற்போது பதுளை மற்றும் அம்பேவல ஆகிய நிலையங்களுக்கு இடையே மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயக்கப்படுகிறது.
இதன் விளைவாக, பதுளை மற்றும் அம்பேவல இடையே இயங்கும் பிரபல்யமான சுற்றுலா தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.





