
பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைத்து, அவரின் எஞ்சியுள்ள ஆறு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நாவல, ராஜகிரியவில் உள்ள அவரது விகாரைக்குச் சென்றதாக Sunday Island செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், தேரர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என விகாரையில் இருந்த பிக்குகள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு முன்னர், ஞானசார தேரர் சுமார் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். இதனால், அவரது அசல் ஆறு வருட சிறைத்தண்டனையின் பெரும்பகுதியை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மூன்று நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, குறித்த ஜனாதிபதி மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையையும் இயற்கை நீதிக் கோட்பாடுகளையும் மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்தது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ஆறு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, 2019 மே மாதம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.





