இலங்கை

மஹர சிறை சம்பவம் வேறு!நீர்கொழும்பு சிறை சம்பவம் வேறு! தெளிவுபடுத்திய அமைச்சர்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு வெளியில் உள்ள குழுவொன்று திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறதா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் எவ்வித காரணமும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் எழவில்லை என்றும், எனவே இது குறித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கு அங்கு காணப்படும் நெரிசலும் ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலைமை காணப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும், தற்போது அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம், கைதிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகும். அதற்கமைய, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button