
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விளக்கமாக பார்ப்போம்,
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் அடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், குறித்த குற்றச்சாட்டுகளில் பூஜித் ஜயசுந்தரவை குற்றவாளியாகத் தீர்மானிப்பதாகத் தெரிவித்தனர்.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை அறிவித்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி பிரியந்த லியனகே, “உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடமையைப் புறக்கணித்ததன் காரணமாக 268 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 586 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் நாட்டின் பொலிஸ்மா அதிபராகச் செயல்பட்டவர் இந்த பிரதிவாதியாவார். குடிமக்களைப் பாதுகாக்கும் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மாலையில், அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் இந்த பிரதிவாதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த நிலைமையைத் தடுப்பதற்கு அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றங்களைத் தடுப்பதற்காக அரசினால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற ரீதியில் அவர் தனது பொறுப்புகளைத் தவறவிட்டுள்ளார்” எனக் குறிப்பிட்ட பெரும்பான்மை நீதிபதிகள் அமர்வு, பிரதிவாதி செய்துள்ள குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தது.
சிறுபான்மைத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும், அதற்கமைய அவரை விடுவித்து விடுதலை செய்வதாகவும் அறிவித்தார்.
இந்த வழக்குத் தீர்ப்பு 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாசித்து அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கமைய முன்னாள்பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (31) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் குழாத்தின் பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் தமது பெரும்பான்மை தீர்ப்பை அறிவித்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய நாள் மாலையில், அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால், மறுநாள் நடத்தப்படவிருந்த தாக்குதல் குறித்து பிரதிவாதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் அதனைத் தடுப்பதற்கு பிரதிவாதி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு புலனாய்வு கூட்டத்தைக் கூட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்திருக்க முடியும். அதேபோல் முப்படையினருடன் கலந்துரையாடி தாக்குதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். எனினும், அவர் அத்தகைய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இதன் மூலம், இத்தாக்குதலினால் கொலைகள் நிகழக்கூடும் என்பதை நன்கு அறிந்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு பிரதிவாதி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.” அதற்கமைய கடமையைப் புறக்கணித்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதிவாதி குற்றவாளியாகத் தீர்மானிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனினும், சிறுபான்மைத் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அதற்கமைய பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இருப்பினும், பெரும்பான்மை நீதிபதிகளின் உடன்பாட்டின் அடிப்படையில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.





