
கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த ‘சிவப்பு’ எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, கங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், மணிக்கு 60–70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்களும் கடற்படையினரும் இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக கங்கேசன்துறை வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், மணிக்கு 50–60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் கடற்படையினரும் நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.0–2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து மீனவர்களும் கடற்படையினரும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கோரப்படுகிறார்கள்.





