
நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின்போது, வெலிங்டனில் புதிய இலங்கை உயரஸ்தானிகராலயம் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டதுடன், இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், வர்த்தகம், முதலீடு, கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சில் நடைபெற்ற சந்திப்புகளுக்கு மேலதிகமாக, பல அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் விடயங்கள் கவனம் பெற்றன.
அத்துடன், ஓக்லாந்தில் நடைபெற்ற வணிக மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளிலும் அமைச்சர் ஹேரத் பங்கேற்று உரையாற்றியதுடன், பல நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இவ்விஜயம் இலங்கை–நியூசிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது.





