
கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்
.இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் பிராந்தியத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்புதல் மற்றும் அத்துமீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முழுமையாகத் தடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, மஹாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள வணிக மதிப்புமிக்க காணிகளை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த காணிகள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக முறையான திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





