
நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவின் சமூகநல மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்ததாவது,
2026 மே 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி 15 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிக ஆபத்துள்ள 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனுடன், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, நாட்டின் 25 மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டினார்.





