
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் உயர்வடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு, உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி ,சோற்றுப்பொதி ,பிரியாணி மற்றும் நாசி கோரெங் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் தேநீர் 5 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை முட்டை ரொட்டி மற்றும் பராட்டா உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 25% முதல் 30% வரையான உணவகங்கள் மற்றும் சிறிய ரக சிற்றுண்டிச்சாலைகள் எரிவாயு விலை உயர்வினால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், இதன் காரணமாகவே விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





