
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தைத் தொடர்ந்து, பாடசாலை சேவை வாகனக் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இலங்கை பாடசாலை சேவை வாகன சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,
டீசல் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக, பாடசாலை சேவை வாகன கட்டணங்களை மாற்றியமைப்பது அவசியமாகியுள்ளது.
எனினும், இந்த அதிகரிப்பை நியாயமான முறையில் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கட்டண உயர்வு தொடர்பாகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பெற்றோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.”
மேலும், கடந்த காலங்களில் டீசல் விலை பலமுறை உயர்ந்த போதிலும், பெற்றோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வழங்குநர்கள் கட்டணங்களை உயர்த்தாமல் தவிர்த்து வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் பழைய கட்டணத்திலேயே சேவையைத் தொடர்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகப் பெற்றோருக்குப் சுமை ஏற்படாத வகையில் இந்தச் சேவையைத் தொடர்ந்து வந்தோம்.
ஆனால், இப்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
டீசல் விலை உயர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு நியாயமான தொகையை மாத்திரம் அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ச்சியான எரிபொருள் விலை உயர்வால், இந்த மாற்றத்தைத் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.”
பெற்றோர் மீது பாரிய சுமையை ஏற்றுவது தமது நோக்கமல்ல எனவும், எரிபொருள் செலவுக்கு ஏற்பக் கட்டணத்தைச் சீர்செய்வதே தமது நோக்கம் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.





