
எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சுகளின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிக்கும் குழுவிற்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நியமிக்கப்பட்டுள்ள 5 அதிகாரிகளும் ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கண்டறிந்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து உடனடித் தீர்வுகளை வழங்குவர்.
கைத்தொழிலாளர்களின் உற்பத்தி விநியோகத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு போதாது என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
விநியோகம் பாதிக்கப்பட்டால் பொருட்களின் விலை உயரும் என்பதால், அதனைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
சதொச, மொத்த இறக்குமதியாளர்கள், சுற்றுலாத் துறை மற்றும் உணவகங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு கோரிக்கைகளை அந்தந்த அமைச்சுகள் ஊடாக விரைவாகச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு அரச அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதங்களுக்குப் பதிலாக, QR குறியீட்டு முறையை விரைவாகச் செயல்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதே இந்த விசேட முகாமைத்துவத் திட்டத்தின் பிரதான இலக்கு என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.





