
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை முகாமைத்துவம் செய்வது குறிதது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழு நேற்று (6) விசேட ஆலோசனைகளை நடத்தியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
அமைச்சர்களான கே.டி. லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை உறுதிப்படுத்துவது மற்றும் அவற்றின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, உள்நாட்டு உணவு உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு முன்னுரிமை அளித்து தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், விவசாயத்திற்குத் தேவையான உரம் மற்றும் இரசாயனப் பொருட்களின் இறக்குமதியில் உலகளாவிய ரீதியில் தடைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது





