
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் அதிகபடியான வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 8.07 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூபாய் 2432 பில்லியன்) வருமானமாகக் கிடைத்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் (6.575 பில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் 22.8% அதிகரிப்பாகும்.
2025 டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 879.1 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவே ஒரு மாதத்தில் பெறப்பட்ட அதிகப்படியான தொகையாகும்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் முறையான கொள்கைகள் மற்றும் தரமான திறன்மிக்க தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியமையே இந்த வெற்றிக்குக் காரணம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் 310,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அந்நிய செலாவணி கையிருப்பைப் பலப்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த வருமானம் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





