
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது.
13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தை வந்தடைந்த ஈருருளிப்பயணமானது மறுநாள் 14.09.2023 காலை பாசல் மாநிலத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து பாசல், பாசல் லான்ட், சொலத்தூண் மாநிலங்களை கடந்து சுவிஸ் நாட்டின் தலைநகராகிய பேர்ண் மாநிலத்தை அண்மித்து நிறைவுற்றிருந்தது.
15.09.2023 காலை பேர்ண் மாநிலத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணமானது பேர்ண் மாநிலத்தின் தலைநகரை சென்றடைந்து அங்கு சுவிஸ் நாட்டின் வெளி விவகார அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பினை மேற்கொண்டு தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற, மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதியினை பெற சுவிஸ் நாட்டின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதனை வலியுறுத்தி கோரிக்கையை முன்வைத்து சந்திப்பு நிறைவுற்றது.
அதனை தொடர்ந்து மலை பாங்கான பாதை வழியே பேர்ண் மாநகரில் இருந்து பயணித்து மாலை பிறிபேர்க் மாநிலத்தில் பயணம் நிறைவுக்கு வந்தது.





அனைத்துல குமுகாயத்தின் கதவுகளைத்தட்டிட,தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள் கடுமையான வெப்பக்காலநிலைக்கு மத்தியிலும் கடும்சவால்களுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணத்தை தொடர்ந்தவண்ணமுள்ளனர்.
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும்
நீதிகேட்டும் தமிழீழமே எமக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் அறவழியில் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அன்புடன் வரவேற்று,தமிழர்கள் என்ற உணர்வுடன் இறுகப்பற்றி,இணைந்து பயணிக்க அன்புரிமையுடன் அழைக்கிறோம்.
தொடரும் அறவழிப்போராட்டம் சுவிஸ் நாட்டின்ஊடாக பயணித்து 18.09.2023 அன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துடன் இணையவுள்ளது .இப்போராட்டத்தில் இனமான உணர்வுடன் அனைத்து உறவுகளும் இணைந்து ஒரணியில் உரிமைக்குரல் எழுப்பிடுவோம்.
வாருங்கள்…
“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப்பங்காளிகளாக மாறவேண்டும்”
- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.