
பஸ்களில் குண்டுவைத்ததும் பௌத்த துறவிகளைக் கொன்றதும் ராஜபக்சாக்களது சதியே! பிள்ளையான் மற்றும் ராஜபக்சேக்களை கைது செய்து சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும். : பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்பி
2009 ற்கு முன்னர் தென்பகுதியில் பேருந்துகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள், பௌத்த துறவிகள் மீது இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் சிங்களை மக்களை தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் திருப்பி தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை அரங்கேற்றுவதற்காக ராஜபக்சவினர் மேற்கொண்ட திட்டமிட்ட சதித் தாக்குதல்களேயாகும். இது பற்றிய உண்மைகளைக் கண்டறிய வேண்டுமானால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியில் விசாரணை நடாத்தப்படல் வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் நாதன்ஓடையில் இடம்பெறும் மண் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். ஈச்சிலம்பற்றில் உள்ள 9 கிராமங்களைச் சேர்ந்த பதின்மூவாயிரம் குடும்பங்களுக்கு வெள்ளத்தால் அழிவு ஏற்படும் ஆப்பத்துள்ளதால் உடனடியாக மண் அகழ்வுக்காக வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்படல் வேண்டும்.
குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பௌத்த விகாரைக் கட்டுமானம் நீதிமன்றக் கட்டளையை மீறி மேற்கொள்ளப்பட்டதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கடந்த 31.08.2023 அன்று தீர்ப்பளித்துள்ளது. எனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக் கட்டுமானம் உடனடியாக இடித்து அகற்றப்படல் வேண்டும்.