
மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறிய செயற்பாடுகளை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியானது பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாகவுள்ள நிலையில் தொடர்ச்சியாக அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கு வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அப்பகுதியில் எந்தவித அத்துமீறல்களும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.
ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.
அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தமை பல ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு பேரினவாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்க்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாய போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் சிங்கள இன மக்களடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.