
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் நாட்டின் ஜனாதிபதி செல்வதாக இருந்தால் கூட மேலாடை கழற்றி செல்ல வேண்டும் என்பது ஆலய விதிமுறை, அதற்கமைய இன்றைய தினம் இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் நானும் மேலும் ஒரு குருவும் சென்றிருந்தோம்.
உரிய நடைமுறைகளை பின்பற்றி நாங்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வெளியேறிய போது நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் எங்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே செல்லமுடியும் என அழைத்திருந்தார்கள்.
அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் நமது கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்றிருந்தோம் ,எனவே இந்த விடயமானது மத நல்லிணக்கத்திற்கான ஒரு முன்னுதாரணமாகும் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளி என கூறலாம்.
எதிர்காலத்தில் நாங்கள் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

